Navigation


 PUBLICATIONS


 Go back to the forum

FiLMiC iNDiA   
Actress Shoba

FiLMiC iNDiA | Published on the 25/6/2023, 8:18 pm | 164 Views

16 வயதில் நாயகியாக நடிக்க வந்து 17 வயதில் திருமணம் செய்து 18வது வயதில் தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகை ஷோபாவின் திரை உலக பயணம் மிகக் குறைந்த வருடங்களில் முடிவடைந்தது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது.

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷோபா. கிட்டத்தட்ட மூன்று வயதில் இருந்தே அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன் பிறகு ஷோபா 1978 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’நிழல் நிஜமாகிறது’ என்ற திரைப்படத்தில் நடித்தார். கமலஹாசன், சரத் பாபு நடித்த இந்த படத்தில் சுமித்ரா மற்றும் ஷோபா ஆகிய இருவரும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஷோபாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது ரஜினியின் ’முள்ளும் மலரும்’ திரைப்படம் தான். மகேந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் இன்னொரு ’பாசமலர்’ என்றே சொல்லலாம். ரஜினியும் ஷோபாவும் அண்ணன் தங்கையாக நடித்தார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்து இருந்தார்கள் என்று சொல்வது தான் பொருத்தமானது.

குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸில் அண்ணன், தங்கை பாசம் உள்ள காட்சிகள் போல் இன்று வரை எந்த படத்திலும் இடம்பெறவில்லை. இதனை அடுத்து ஷோபா ’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’, ’பசி’, ’அழியாத கோலங்கள்’, ’மூடுபனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பசி திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் பாலு மகேந்திராவின் ’மூடுபனி’ படத்தில் நடிக்கும்போது அவருடன் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தனது 17 வது வயதில் பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே ஆண்டில் அவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் இன்று வரை புரியாத புதிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகக்குறைந்த வயதில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஷோபா இளம் வயதில் தற்கொலை செய்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது திரை உலகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இருப்பினும் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நடிகையாக வந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கே செல்லவும்...

About the author